போலீஸ் வாகனம் மோதி விபத்து: மேலும் ஒரு பெண் பரிதாப சாவு

கடையநல்லூர் அருகே போலீஸ் வாகனம் மோதிய விபத்தில் மேலும் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-11-11 22:15 GMT
கடையநல்லூர், 

அயோத்தி வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டதையொட்டி, நெல்லை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணிக்காக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பட்டாலியனை சேர்ந்த போலீசார் ஒரு போலீஸ் வாகனத்தில் கடையநல்லூருக்கு வந்தனர். அந்த வாகனம் கடையநல்லூரில் போலீசாரை இறக்கி விட்டு விட்டு, மீண்டும் ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரம் பகுதியில் சென்றபோது, வாகனம் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலையோரம் உள்ள கொடிக்கம்பத்தில் மோதியது. அதன்பிறகும் நிற்காமல் ஓடி அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் புகுந்தது.

இதில் திரிகூடபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மைதீன்பிச்சை மனைவி மல்லிகா என்ற ஆயிஷா பீவி (வயது 39) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் அவருடைய மகள் இர்பானா ஆசியா (15), அதே பகுதியை சேர்ந்த கன்சாள் மகரிபா பீவி (40) மற்றும் போலீஸ் வாகனத்தில் இருந்த போலீசார் முத்து, ராசுகுட்டி ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கன்சாள் மகரிபா பீவி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்