செங்கல்பட்டு அருகே குடிசை எரிந்து சேதம்

செங்கல்பட்டு தாலுகா மணபாக்கம், குடிசை தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது.

Update: 2019-11-17 21:45 GMT
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு தாலுகா மணபாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட காலனி பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 49). சென்னையில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தனது மகள்களான யாமினி (22) பவானி (20) ஆகியோருடன் குடிசையில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது அவரது குடிசை தீப்பிடித்தது. குடிசையில் இருந்த அனைவரும் வெளியே ஓடி வந்தனர். அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். இது குறித்து செங்கல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் தீ மளமளவென பரவி குடிசை முழுவதும் தீக்கிரையானது. பீரோவில் இருந்த ஆவணங்கள், சான்றிதழ்கள், ரேஷன்கார்டு போன்றவை தீயில் கருகியது.

இதுகுறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு தாசில்தார் தீக்கிரையான குடிசையை பார்வையிட்டார். முத்துவுக்கு ஆறுதல் கூறி, அரசு சார்பில் புதிய வீடு வழங்க ஆவன செய்வதாக உறுதியளித்தார். மேலும் அவருக்கு அரிசி, வேட்டி, சேலைகள், போர்வை போன்றவற்றை வழங்கினார்.

மேலும் செய்திகள்