மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-11-19 23:00 GMT
கடலூர்,

வேப்பூர் அருகே உள்ள கச்சிபெருமாநத்தம் கிராம நிர்வாக அலுவலர் ராஜூ தலைமையிலான அதிகாரிகள் வண்ணாத்தூர் மணிமுக்தாறு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த லாரியை அதிகாரிகள் வழிமறித்தனர். உடனே லாரியில் இருந்த சேகர் மகன் சிவசங்கரமூர்த்தி (வயது 35), பிரகா‌‌ஷ் ஆகியோர் அதிகாரிகளை ஆபாசமாக திட்டி பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தனர்.

பின்னர் அதிகாரிகள் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்ததுடன், சிவசங்கரமூர்த்தி, பிரகா‌‌ஷ் ஆகியோரை பிடித்து வேப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம்

சிவசங்கரமூர்த்தி மீது வேப்பூர் போலீஸ் நிலையத்தில் மணல் கடத்தியதாக 2 வழக்குகளும், விழுப்புரம் மாவட்டம் எடைக்கல் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது. இதனால் அவரது குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு சிவசங்கரமூர்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் சிவசங்கரமூர்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார்.

இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிக்கும் சிவசங்கரமூர்த்தியிடம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்