இறால் பண்ணை அதிபர் வீடு-விடுதியில் வருமான வரி சோதனை காலையில் தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது

வேதாரண்யத்தில், இறால் பண்ணை அதிபர் வீடு, விடுதி உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். காலையில் தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.

Update: 2019-11-27 23:15 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவர் அங்குள்ள பகுதிகளில் இறால் பண்ணை வைத்துள்ளார். மேலும் ரெயில்வே ஸ்டே‌‌ஷன் ரோட்டில் இவருக்கு சொந்தமான திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி ஆகியவை ஒரே வளாகத்தில் அமைந்து உள்ளன.

இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் 15 பேர் சுவாமிநாதனின் வீட்டிற்கு திடீரென்று வந்து சோதனை நடத்தினர். வீட்டில் மட்டுமல்லாது திருமண மண்டபம், தங்கும் விடுதி ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது. மேலும் சுவாமிநாதனுக்கு ஒரு தனியார் வங்கியில் லாக்கர் உள்ளது. அந்த வங்கிக்கும் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், வங்கி லாக்கரை திறந்து சோதனையிட்டனர்.

நள்ளிரவு வரை...

காலை 7.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. ஆனால் சோதனை விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் எந்த விவரமும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

இறால் பண்ணை அதிபர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை வேதாரண்யம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இறால் ஏற்றுமதி நிறுவனம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள நிருத்தனமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜா(வயது45). இவர,் செருதூரில் இறால் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய வீடு மற்றும் நிறுவனத்திலும் நேற்று வருமான வரி சோதனை நடந்தது. திருச்சியில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

5 பேர் கொண்ட குழுவினர் செருதூரில் உள்ள இறால் குடோனிலும், 3 பேர் கொண்ட குழுவினர் நிருத்தனமங்கலத்தில் உள்ள ராஜாவின் வீட்டிலும் சோதனை செய்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் பாதுகாப்புக்காக வேளாங்கண்ணி போலீசாரையும் உடன் அழைத்து வந்திருந்தனர்.

ஆவணங்கள் சோதனை

இறால் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரின் வீடு மற்றும் குடோனில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது. சோதனையின்போது வீடு, குடோனில் இருந்தவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அனைவருடைய செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டது. பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

காலை 10 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 4.30 மணி வரை நீடித்தது. சோதனை நடைபெற்ற வீடு மற்றும் குடோனுக்குள் வெளி நபர்கள் யாரும் நுழையாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்