புஞ்சைபுளியம்பட்டியில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை

புஞ்சைபுளியம்பட்டியில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Update: 2019-11-28 22:30 GMT
புஞ்சைபுளியம்பட்டி, 

புஞ்சைபுளியம்பட்டி சேரன் வீதியை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 50). இவர் பனையம்பள்ளி அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சித்ரக்கனி. இவர் சத்தியமங்கலத்தை அடுத்த ராஜன் நகர் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகன் தரனிஷ் (வயது 16).

இவர் கோவை மாவட்டம் சிறுமுகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இதற்கான அந்த பள்ளியில் உள்ள விடுதியில் அவர் தங்கி உள்ளார்.

சம்பவத்தன்று மயில்சாமியும், சித்ரக்கனியும் சிறுமுகையில் உள்ள தங்களுடைய மகன் தரனிசை பார்க்க சென்றுவிட்டனர். அன்று இரவு அவர்களின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர். உடனே அவர்கள் இதுபற்றி மயில்சாமிக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3½ பவுன் சங்கிலியை காணவில்லை. ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த நகையை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்றவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்