பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கியது யார்? போலீசார் விசாரணை

பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கியது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-11-28 22:15 GMT
ஜீயபுரம்,

திருச்சி மாவட்டம் வாத்தலை அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாயார் திட்டியதால் வி‌‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவருடைய உறவினர்கள், அவரை மீட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அப்போது அந்த மாணவியை பரிசோதித்த போது அவள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் அந்த மாணவியையும், அவள் வயிற்றில் வளரும் குழந்தையையும் காப்பாற்ற போராடினார்கள்.

போலீசார் விசாரணை

ஆனால், மாணவிக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் சுயநினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி தகவல் அறிந்த ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர், அந்த மாணவிக்கு பிறந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். அந்த மாணவி சுயநினைவின்றி இருப்பதால், அவரை கர்ப்பமாக்கியது யார்? என்று தெரியவில்லை. இதுகுறித்து ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்