நெல்லை அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல்; போலீஸ்காரர் பலி

நெல்லை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-11-29 22:45 GMT
பேட்டை,

நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூரை அடுத்த காங்கேயன்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 26). இவர் நாங்குநேரி காவல்நிலையத்தில் போலீசாக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

ஆறுமுகம் நேற்று மாலை காங்கேயன் குளத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் நாங்குநேரிக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றார். சுத்தமல்லி அருகே கோபாலசமுத்திரம் சாலை அத்திமேடு விலக்கு அருகே சென்று கொண்டு இருந்த போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சுத்தமல்லி வ.உ.சி.நகரை சேர்ந்த அத்ரீதன் என்பவரும் காயம் அடைந்தார்.

சம்பவ இடத்துக்கு சுத்தமல்லி போலீசார் வந்தனர். அவர்கள், பலியான ஆறுமுகம் உடலை மீட்டு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்