வாணாபுரம் அருகே, பாலீஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் 3 பவுன் நகை அபேஸ் - பெண்ணுக்கு வலைவீச்சு
வாணாபுரம் அருகே பாலீஷ் போடுவதாக கூறி மூதாட்டியிடம் 3 பவுன் நகையை அபேஸ் செய்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வாணாபுரம்,
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள தென்மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் பழனி. அவருடைய மகன் சங்கர் (வயது 45). இவர், தனது தாயுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சங்கர் வேலைக்காக சென்று உள்ளார். அப்போது வீட்டில் அவருடைய தாய் வனஜா (61) மட்டும் தனியாக இருந்தார். அந்த சமயத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வனஜாவின் வீட்டிற்கு வந்து உள்ளார்.
இதனையடுத்து அவர், வனஜாவிடம் நகையை கழற்றி கொடுங்கள் பாலீஷ் போட்டு தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பி தனது கழுத்தில் இருந்த 3 பவுன் தாலி சங்கிலியை கழற்றி அந்த பெண்ணிடம் கொடுத்து உள்ளார்.
நகையை வாங்கிய அந்த பெண் திடீரென்று அங்கிருந்து நகையுடன் மாயமாகிவிட்டார்.
இதுகுறித்து வெறையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து, நகையுடன் மாயமான பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.