15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: பிரசாரம் இன்று ஓய்கிறது - தலைவர்கள் இறுதிகட்ட ஓட்டு வேட்டை

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஓய்கிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-12-03 00:17 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள அதானி, காக்வாட், கோகாக், எல்லாப்பூர், இரேகெரூர், ராணிபென்னூர், விஜயநகர், சிக்பள்ளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜிநகர், ஒசக்கோட்டை, கே.ஆர்.பேட்டை, உன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் போட்டியிட 248 வேட்பாளர்கள் 355 மனுக்களை தாக்கல் செய்தனர். சட்டப்படி இல்லாத 54 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 53 வேட்பாளர்கள் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றனர். அது போக தற்போது, தேர்தல் போட்டியில் 165 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த 319 பறக்கும் படைகள், 578 நுண்ணிய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 8,326 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 8,186 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 7,876 வி.வி.பேட் எந்திரங்களும் (யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரங்கள்) பயன்படுத்தப்படுகின்றன.

இந்த 15 தொகுதிகளில் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் மொத்தம் 37 லட்சத்து 77 ஆயிரத்து 970 வாக்காளர்கள் உள்ளனர். இந்த 15 தொகுதிகளில் 4 ஆயிரத்து 185 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. 22 ஆயிரத்து 958 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த 15 தொகுதிகளில் பா.ஜனதா சார்பில் 13 தொகுதிகளில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களும், சிவாஜிநகரில் எம்.சரவணா, ராணிபென்னூரில் அருண்குமார் புஜார் ஆகியோரும் களமிறக்கப்பட்டு உள்ளனர். காங்கிரஸ் புதிய முகங்களை களம் இறக்கியுள்ளது. குறிப்பாக காக்வாட் தொகுதியில் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த ராஜூ காகே போட்டியிடுகிறார். கோகாக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் லகன் ஜார்கிகோளியும், சிவாஜிநகரில் ரிஸ்வான் ஹர்ஷத் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.

ஜனதா தளம்(எஸ்) கட்சி, யஷ்வந்தபுரத்தில் ஜவராயிகவுடா, கோகாக்கில் அசோக் பூஜாரி உள்ளிட்டோரை களம் இறக்கியுள்ளது. ஒசக்கோட்டையில் பா.ஜனதா வேட்பாளர் எம்.டி.பி.நாகராஜ் சுமார் ரூ.1,200 கோடி சொத்து மதிப்புடன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் கூட்டணி அரசில் வீட்டு வசதித்துறை மந்திரியாக இருந்தவர். அந்த தொகுதியில் பா.ஜனதாவை சேர்ந்த பச்சேகவுடா எம்.பி.யின் மகன் சரத் பச்சேகவுடா சுயேச்சையாக போட்டியிட்டு, பா.ஜனதா, காங்கிரசுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த இடைத்தேர்தல் முடிவு மாநில பா.ஜனதா அரசின் எதிர்காலத்தை நிர்ணயிக்க உள்ளதால், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று தொகுதிகளை முற்றுகையிட்டு ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று கோகாக், அதானி ஆகிய தொகுதிகளிலும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சிக்பள்ளாப்பூரிலும், தேவேகவுடா கோகாக் கிலும், குமாரசாமி சிக்பள்ளாப்பூர் தொகுதியிலும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அனல் பறந்து வந்த இடைத்தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இன்று காலை முதலே பிரசாரத்தில் ஈடுபட தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இறுதிக்கட்டத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பரிசுப்பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்க மாநில தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் செய்திகள்