மான் வேட்டையாடிய வழக்கில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பணியிடை நீக்கம் கலெக்டர் உத்தரவு

மான் வேட்டையாடிய வழக்கில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2019-12-03 23:15 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மறைமலை நகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ராபின்சன் (வயது 46). இவர் சம்பவத்தன்று தன்னுடைய காரில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சிறைத்துறை பெட்ரோல் விற்பனை நிலைய பகுதியில் வந்தபோது விபத்தில் சிக்கினார். இது குறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது ராபின்சன் வந்த காரில் ரத்த கறைகள் இருப்பதை கண்ட போலீசார், ரத்த கறைகள் குறித்து ராபின்சனிடம் விசாரணை நடத்தினர். அப்போது காரில் ரத்த கறையுடன் 2 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் ராபின்சனை கைது செய்து, அவரிடம் இருந்த 3 துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.

பணியிடை நீக்கம்

மேலும் ராபின்சன் கொடுத்த தகவலின்படி, புதுக்கோட்டை அருகே உள்ள பூங்குடி பகுதியை சேர்ந்த ராமன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் ராமச்சந்திரன், புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றும் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியன், திருவப்பூரை சேர்ந்த ராஜே‌‌ஷ், சுரே‌‌ஷ், பாசிப்பட்டியை சேர்ந்த வெங்கடாஜலபதி, கீரனூர் எழில் நகரை சேர்ந்த சாமுவேல் பிரின்ஸ் ஆகியோர் மீது வனவிலங்குகளை வேட்டையாடியதாக கூறி, திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் ராமன், ராஜே‌‌ஷ், வெங்கடாஜலபதி, சாமுவேல் பிரின்ஸ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள போலீஸ்காரர் ராமச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியன், சுரே‌‌ஷ் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதில் போலீஸ்காரர் ராமச்சந்திரனை ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தின் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியனை கலெக்டர் உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்