தம்மம்பட்டியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

தம்மம்பட்டியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2019-12-03 22:30 GMT
தம்மம்பட்டி,

தம்மம்பட்டி பேரூராட்சி பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 9-வது வார்டில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குடிநீர் பிரச்சினை பற்றி பொதுமக்கள் அலுவலர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை 9-வது வார்டு பகுதி பொதுமக்கள் செந்தாரப்பட்டி - தம்மம்பட்டி சாலையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நடவடிக்கை எடுக்கப்படும்

அப்போது பொதுமக்கள், தங்கள் பகுதியில் சுமார் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது என கூறினர். அதற்கு செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி, அங்கு சின்டெக்ஸ் தொட்டி அமைத்து சீரான குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தார்.

அதனைத்தொடர்ந்து சாலைமறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்