நாகை அக்கரைப்பேட்டையில் மீனவ மகளிருக்கான கூட்டுறவு சங்க தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது

நாகை அக்கரைப்பேட்டையில் மீனவ மகளிருக்கான கூட்டுறவு சங்க தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நடைபெற்றது.

Update: 2019-12-04 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை அக்கரைப்பேட்டை மீனவ மகளிருக்கான கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று அக்கரைபேட்டையில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் அக்கரைப்பேட்டை மீனவர் மகளிர் கூட்டுறவு சங்க நிர்வாக குழு உறுப்பினர்களாக 7 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால் தி.மு.க. சார்பில் 7 பேரும், அ.தி.மு.க. சார்பில் 7 பேரும், சுயேச்சையாக 1 நபரும் என்று மொத்தம் 15 பெண்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் தேர்தல் நடத்தும் அலுவலராக நடேசராஜா பணியாற்றினார். இதையடுத்து வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கியது. தேர்தலில் 3 ஆயிரத்து 445 மகளிர் வாக்குப்பதிவு செய்து 7 உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். தேர்தலில் வாக்களிக்க ஆர்வமுடன் ஏராளமான பெண்கள் வந்தனர். விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவின் போது தங்களது வாக்குகளை அளிக்க வந்த பெண்களிடம் தி.மு.க., அ.தி.மு.க.வினர் வாக்குகள் சேகரிக்க தொடங்கினர். இதனால் இரண்டு கட்சியினர் இடையே வாக்குகள் சேகரிப்பதில் கடும் போட்டி நிலவியது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக வாக்குச்சாவடி அருகே கலவரத்தை தடுக்கும் வஜ்ரா வாகனமும் நிறுத்திவைக்கப்பட்டது. நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) நாகை மீன்வளத்துறை அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து வருகிற 9-ந்தேதி தலைவி மற்றும் துணைத்தலைவி பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்