திருச்சியில் தண்டவாளத்தில் விரிசல்: கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது

திருச்சியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது.

Update: 2019-12-05 23:00 GMT
திருச்சி,

கன்னியாகுமரியில் இருந்து நேற்று முன்தினம் மாலை சென்னைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. இந்த ரெயிலில் பயணிகள் ஏராளமானோர் பயணம் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் ரெயில் திருச்சி ஜங்ஷனை அடுத்து பொன்மலை ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயிலில் திடீரென ஒரு அதிர்வு ஏற்பட்டது. இதனை என்ஜின் டிரைவர் உணர்ந்தார். தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இந்த அதிர்வு ஏற்பட்டது அவருக்கு தெரியவந்தது.

தண்டவாளத்தில் விரிசல்

இது குறித்து ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கும், ரெயில் நிலைய அதிகாரிகளுக்கும் அவர் தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அதிர்வு ஏற்பட்ட குறிப்பிட்ட இடத்தில் ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை பார்வையிட்டனர். அப்போது தண்டவாளத்தில் லேசாக விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டனர்.

இதையடுத்து அந்த வழியாக வந்த ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பின்னர் தண்டவாள விரிசலை சரி செய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

பெரும் விபத்து தவிர்ப்பு

ராமேசுவரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் போராடி தண்டவாள விரிசலை ஊழியர்கள் சரி செய்தனர். பின்னர் ராமேசுவரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் தாமதமாக நேற்று அதிகாலை 3.10 மணி அளவில் புறப்பட்டு சென்றது. முன்னதாக தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து சென்றபோது அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது. இதனால் பயணிகள் உயிர் தப்பினர். தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ரெயில் அதிர்வின் மூலம் என்ஜின் டிரைவர் கண்டறிந்து உடனடியாக தகவல் தெரிவித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் செய்திகள்