படப்பை அருகே 10-ம் வகுப்பு மாணவன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை

படப்பை அருகே வீட்டின் மின்விசிறியில் 10-ம் வகுப்பு பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-12-09 23:00 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஒரகடம் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 39). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் அருண், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இரண்டாவது மகன் மணிமாறன் (15). இவர் வடக்குப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் மணிமாறன் நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது மாணவன் வீட்டில் மறந்து வைத்த நோட்டை எடுத்து வர சொல்லி ஆசிரியை வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து மணிமாறன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அதே பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் சமையல் வேலை செய்துவரும் மாணவனின் பாட்டி ராஜம்மாள் நீண்ட நேரம் ஆகியும் மணிமாறன் பள்ளிக்கு வராததால் மாணவனை தேடி வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக மூடப்பட்டுள்ளதை பார்த்து கதவை திறக்க முயற்சித்துள்ளார். ஆனால் கதவை திறக்க முடியவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜம்மாள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மாணவன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுகுறித்து ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த ஒரகடம் போலீசார் மாணவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, மாணவன் இறந்ததால் ஆத்திரம் அடைந்த மாணவனின் உறவினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்