குடும்பத்தினர் பேச மறுத்ததால்- காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

குடும்பத்தினர் பேச மறுத்ததால் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-12-09 21:50 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி லாஸ்பேட்டை ஜீவாநகர் செயின்பால்பேட் பகுதியை சேர்ந்தவர் அங்காளன் (வயது 65). கொத்தனார். இவரது இளையமகள் சசிரேகா(25) பி.ஏ. படித்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக நேரு வீதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் அவர் மேல் படிப்பு படிப்பதாக கூறி சென்னைக்கு சென்று விட்டார். அதன் பின்னர் அவர் செல்போனில் குடும்பத்தினருடன் பேசி வந்தார்.

இந்தநிலையில் சசிரேகா துணிக்கடையில் தன்னுடன் வேலை செய்த முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த இஸ்ஷாக் (52) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது பெயரையும் ஆயிஷா என மாற்றிக் கொண்டார். இவர்களுக்கு 3 மாத குழந்தை உள்ளது. கோவிந்தசாலையில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இஸ்ஷாக்கிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

இது அங்காளனுக்கு தெரியவந்ததையடுத்து தனது மகளிடம், ஏன் இப்படி துரோகம் செய்து விட்டாய் என்று கூறி திட்டியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு குடும்பத்தினர் யாரும் ஆயிஷாவிடம் பேச மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த ஆயிஷா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்