சுகாதார விழிப்புணர்வுக்காக அரசு பள்ளியில் வர்ணம் தீட்டி அசத்திய ஆஸ்திரேலிய மாணவிகள்

சுகாதார விழிப்புணர்வுக்காக அரசு நடுநிலைப்பள்ளியில் ஆஸ்திரேலிய மாணவிகள் வர்ணம் தீட்டி அசத்தினர்.

Update: 2019-12-10 23:00 GMT
திருச்சி,

ஆஸ்திரேலிய நாட்டு கர்ட்டைன் பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவிகள் 30 பேரும், 3 ஆசிரியர்களும் கடந்த மாதம் 25-ந் தேதி திருச்சி வந்தனர். திருச்சி பிராட்டியூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் ஆஸ்திரேலிய குழுவினர் கலந்துரையாடி வருகின்றனர்.

மேலும் அவர்கள், பள்ளியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதுடன், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். அத்துடன் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில பேச்சாற்றலை அதிகரிக்கும் வகையில் வகுப்புகளும் நடத்துகின்றனர்.

சுகாதார விழிப்புணர்வு

இந்த நிலையில் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளியில் சுவர்களில் வர்ணம் தீட்டும் பணியை ஆஸ்திரேலிய மாணவிகள் மேற்கொண்டனர். வேறு யாருடைய உதவியும் இன்றி அவர்களே வர்ணம் தீட்டி அசத்தினர்.

இதில் கைகளை சுத்தமாக கழுவுதல் மற்றும் சுகாதாரம் குறித்தும் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் அறியும் வகையில் ஓவியங்களை வரைந்தனர். பள்ளியின் உள்ளே சுவர் மற்றும் கழிப்பறை சுவரில் இந்த வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.

நாப்கின் தயாரிப்பு

புத்தம் புதிய வர்ணம் மாணவ-மாணவிகளை கவர்ந்துள்ளது. அதேநேரத்தில் சுத்தம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதாக பள்ளியின் தலைமை ஆசிரியை ஆஷாதேவி தெரிவித்தார்.

மேலும் மாணவிகளின் பெற்றோருக்கு நாப்கின் தயாரிக்கும் பணியை ஆஸ்திரேலிய மாணவிகள் அளித்தனர்’ என்றார்.

மேலும் செய்திகள்