பீட் மாவட்டத்தில் பயங்கரம்: மனைவியை கொன்று உடலை கூறுபோட்டவர் கைது - ஒரு வாரமாக ‘பிரிட்ஜ்’க்குள் வைத்திருந்தது அம்பலம்

பீட் மாவட்டத்தில் மனைவியை கொன்று உடலை கூறுபோட்டு வீசியவரை போலீசார் கைது செய்தனர். அவர் தனது மனைவியின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி ‘பிரிட்ஜ்’க்குள் ஒருவாரமாக வைத்திருந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

Update: 2019-12-10 22:55 GMT
மும்பை,

பீட் மாவட்டம் மஜல்காவ் தாலுகா அசோக்நகர் உள்ள ஒரு சாக்கடையில் நேற்றுமுன்தினம் மனித உடல் பாகங்கள் மிதந்து கொண்டிருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த உடல் பாகங்களை கைப்பற்றினர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, அதிகாலை நேரத்தில் ஆசாமி ஒருவர் கையில் வாளி மற்றும் இரு குழந்தைகளுடன் அந்த சாக்கடை அருகே நின்று கொண்டிருந்ததை பார்த்ததாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த நபரை அடையாளம் காண்பதற்காக அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்தனர்.

அப்போது, அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையின் போது, அவர் தனது மனைவி ரேஷ்மா பதானை கொன்று உடலை கூறுபோட்டு வீசியதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். ஒரு வாரத்திற்கு முன்னதாகவே அவர் மனைவியை கொலை செய்து விட்டார்.

ஆனால் இதை மறைப்பதற்காக ரேஷ்மாவின் உடலை துண்டு, துண்டாக வெட்டி கூறுபோட்டார். துர்நாற்றம் வீசி தான் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக உடல் பாகங்களை வீட்டில் உள்ள பிரிட்ஜ்க்குள் வைத்தார். இது பக்கத்து வீட்டுக்காரர்கள் யாருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில், ஒருவாரமாக தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டிலேயே தங்கியிருந்த அவர் மனைவியின் உடல் பாகங்களை வீசுவதற்கு நேரம் பார்த்து காத்து இருந்தார்.

அதன்படி நேற்றுமுன்தினம் அதிகாலை நேரத்தில் உடல் பாகங்களின் ஒரு பகுதியை வாளியில் எடுத்து கொண்டு குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து கொண்டு வந்து சாக்கடையில் வீசியிருக்கிறார் என்பது தெரியவந்தது. போலீசார் பிரிட்ஜில் இருந்த உடல் பாகங்களையும் கைப்பற்றினர். பின்னா் அந்த உடல் பாகங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

என்ன காரணத்துக்காக அவர் மனைவியை கொன்று உடலை கூறுபோட்டார் என்பது உடனடியாக தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பையில் தந்தையை கொன்று உடலை கூறுபோட்டு சூட்கேசில் அடைத்து வீசியதாக வளர்ப்பு மகளையும், கல்யாண் பகுதியில் மகளை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய தந்தையையும் போலீசார் கைது செய்து இருந்தனர். தற்போது பீட் அருகே நடந்த சம்பவத்தால் மராட்டியத்தில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த கொடூரங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்