சிங்கப்பெருமாள் கோவில் அருகே போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்த - 3 பேர் கைது

சிங்கப்பெருமாள் கோவில் அருகே லாரி டிரைவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டு, போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-12 21:45 GMT
வண்டலூர்,

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 23). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து சேலம் நோக்கி லாரியில் சென்று கொண்டிருந்தார். சிங்கப்பெருமாள்கோவிலை அடுத்த பாரேரி அருகே செல்லும்போது லாரி டயர் திடீரென வெடித்தது.

இதனையடுத்து லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு லாரியின் டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த 3 பேர் உதயசங்கரை தாக்கி அவரிடம் இருந்து ரூ.500 பறித்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட தலைமை காவலர் யுவராஜூக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு ரோந்து வாகனத்தில் வந்த தலைமை காவலர் யுவராஜ் லாரி டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்டார்.

அப்போது அவர்கள் போலீஸ் என்றும் பாராமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு போலீஸ் ரோந்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்தனர். இதனையடுத்து தலைமை காவலர் யுவராஜ் தகராறில் ஈடுபட்ட 3 பேரையும் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து மறைமலைநகர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.

விசாரணையில் செங்கல்பட்டு அருகே உள்ள அஞ்சூர் பகுதியை சேர்ந்த கோமளபதி (35), குன்னவாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (29), புதுக்கோட்டையை பகுதியை சேர்ந்த அந்தோணி ஸ்டீபன் (28) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து லாரி டிரைவர் உதயகுமார் கொடுத்த புகாரின் பெயரில் ஒரு வழிப்பறி வழக்கும், தலைமை காவலர் யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில் மற்றொரு வழக்கும் பதிவு செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் 3 பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்