தொட்டியம் அருகே மயான பாதையை சீரமைக்கக்கோரி முதியவரின் பிணத்தை நடுரோட்டில் வைத்து மறியல்

தொட்டியம் அருகே மயான பாதையை சீரமைக்கக்கோரி முதியவரின் பிணத்தை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-12-12 23:00 GMT
தொட்டியம்,

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள நத்தம் ஊராட்சிக்குட்பட்ட கூன்ராக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏவுரி(வயது 80). இவர் உடல் நலக்குறைவால் நேற்று இறந்து போனார். அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நேற்று மாலை அப்பகுதியில் உள்ள காவிரி கரை மயானத்திற்கு தகனம் செய்ய உறவினர்கள் எடுத்து சென்றனர்.

மயானத்திற்கு செல்லும் பாதை ஏற்கனவே குண்டும்-குழியுமாக இருந்தது. தற்போது பெய்த மழை காரணமாக மேலும் பழுதடைந்தது. இதனால், பிணத்தை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால், ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மயான பாதையை சீரமைக்கக்கோரி ஏவுரியின் பிணத்தை தொட்டியம்-காட்டுப்புத்தூரில் நடுரோட்டில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவலறிந்து தொட்டியம் தாசில்தார் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மயானப் பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன்பேரில் பிணத்தை எடுத்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்