இலங்கை தமிழர் குடியுரிமை குறித்து மத்திய அரசிடம் பேசுவோம் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி
இலங்கை தமிழர்களின் குடியுரிமை குறித்து மத்திய அரசிடம் பேசுவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை,
நாட்டின் வளர்ச்சி, தேச வளர்ச்சிக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்கிறோம். ஸ்டாலின் முதல்-அமைச்சர் கனவு கானல் நீராகி போனதால் விரக்தியால் பேசுகிறார். தமிழக மக்கள் நலனுக்காக மத்திய அரசை ஆதரிப்போம். தமிழகத்திற்கு மற்றும் தமிழக மக்களுக்கு எதிரான விஷயங்களுக்கு எதிர்க்கவும் செய்வோம்.
தி.மு.க., காங்கிரஸ் கட்சிதான் சிறுபான்மையினரை ஆதரிக்கிறோம் என்று அவர்களை தூண்டி விடுகிறார்கள். இலங்கை தமிழர் குடியுரிமை பிரச்சினை தொடர்பாக தி.மு.க. நீலிக்கண்ணீர் வடிக்கிறது. இலங்கை இறுதி போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட போது அவர்கள் என்ன செய்தனர்? அவர்களுக்கு இலங்கை தமிழர் பற்றி பேச அருகதை இல்லை. மேலும் இலங்கை தமிழர்களின் குடியுரிமை குறித்து மத்திய அரசிடம் பேசி முடிவு செய்வோம். இதற்கு முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இருக்கும் இடத்தில் தான் அ.தி.மு.க.வினர் இருப்பார்கள். யாருடன் கூட்டணி என்பதை அ.தி.மு.க.தான் முடிவு செய்யும்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி போல் மீண்டும் வெற்றி பெறுவோம். அ.தி.மு.க.விற்கு வெற்றி தான் இலக்கு. சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் போன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. தற்போதும் நடப்பதாக ஊடகங்களின் செய்தி வந்ததை அடுத்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.