தரமான உணவு வழங்கக்கோரி கல்லூரி விடுதி மாணவர்கள் திடீர் போராட்டம் - கடலூரில் பரபரப்பு

கடலூரில் விடுதியில் தரமான உணவு வழங்கக்கோரி கல்லூரி விடுதி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-13 22:30 GMT
கடலூர், 

கடலூர் தேவனாம்பட்டினத்தில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கடலூர் மாவட்டம் மட்டுமின்றி விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு வசதியாக, கல்லூரியின் அருகே ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி அமைந்துள்ளது.

இந்த விடுதியில் 197 மாணவர்கள் தங்கியிருந்து, கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக விடுதியில் தரமான உணவு வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை மாணவர்களுக்கு விடுதியில் உணவு வழங்கப்பட்டது. அந்த உணவு தரமானதாக இல்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நேற்று காலை சமைக்கப்பட்ட உணவுடன் விடுதி முன்பு அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த தேவனாம்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா மற்றும் போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், கல்லூரி நிர்வாகத்திடம் பேசி தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்