குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் இலங்கை தமிழர்களை அங்கீகரித்திருக்க வேண்டும் அமைச்சர் பேட்டி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் இலங்கை தமிழர்களை அங்கீகரித்திருக்க வேண்டும் என்பதே அ.தி.மு.க.வின் விருப்பம் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

Update: 2019-12-14 23:00 GMT
கொரடாச்சேரி,

தமிழக அரசு தான் தேர்தலை நடத்தவில்லை என தி.மு.க. திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தார்கள். தற்போது தி.மு.க.வினர் தேர்தலை நிறுத்த வேண்டுமென நினைத்தார்கள் என்பதை தெரிந்து கொண்டோம். இதற்கு நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் சான்று. உள்ளாட்சி தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் தி.மு.க.வுக்கு குட்டு போட்டு விட்டது.

இலங்கை தமிழர்களை அங்கீகரித்திருக்க வேண்டும்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் இலங்கை தமிழர்களை அங்கீகரித்திருக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கான திருத்தம் இந்த மசோதாவில் தேவை என்று கூறி ஆதரவு தெரிவித்து உள்ளோம்.

கூட்டணி தர்மத்தை மதிக்க வேண்டும் என்கின்ற நிலையில் இருந்தாலும், இந்த மசோதாவின் நிறை, குறைகளை சுட்டி காட்டியுள்ளோம். மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம். மக்களுக்கு எதிரானது எதுவாக இருந்தாலும் நாங்கள் அதனை எதிர்ப்போம்.

அ.தி.மு.க. அரசின் நடவடிக்கை

தற்போது வெங்காயம் விலை சரிந்துள்ளது. வெங்காய விலை ஏற்றத்தை வைத்து ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்கிவிட முடியுமா என ஸ்டாலின் நினைத்தார். வெங்காய விலை வீழ்ச்சியால் பல ஆட்சிகள் விழுந்ததாகவும் பட்டியலிட்டார்.

ஆனால் ஸ்டாலினுடைய கனவு என்றைக்கும் பலிக்காது என்பது போல், தற்போது வெங்காய விலை தான் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது அ.தி.மு.க. அரசின் நடவடிக்கையால் ஏற்பட்ட விலை சரிவு என்பது அனைவருக்கும் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

100 சதவீத வெற்றி

முன்னதாக நன்னிலத்தில் அமைச்சர் காமராஜ் அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 100 சதவீத வெற்றியை பெறும். ஜெயலலிதாவின் உன்னதமான திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது. அதையே எடப்பாடி அரசும் செய்து வருகிறது என்றார்.

பொங்கல் பரிசு தொகை எப்போது வழங்கப்படும் என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதை அரசு தான் சொல்ல வேண்டும் என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்