கடைசி நாளான இன்று விடுமுறை என்பதால் விவசாயிகள் நாளை பயிர் காப்பீடு செய்யலாம் தஞ்சை கலெக்டர் தகவல்

பயிர் காப்பீடு செய்ய கடைசி நாளான இன்று விடுமுறை என்பதால் நாளையும் காப்பீடு செய்யலாம் என்று கலெக்டர் கூறி உள்ளார்.

Update: 2019-12-14 22:45 GMT
திருவையாறு,

பிரதமரின் பயிர் காப்பீட்டுத்திட்டம் 2016-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் விவசாயிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. நடப்பு பருவத்தில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிருக்கு தற்சமயம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து வருகிறார்கள்.

இது தொடர்பாக திருவையாறு வட்டம், மணக்கரம்பை மற்றும் கண்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளிடமிருந்து காப்பீடு பெறுவது மற்றும் விவசாயிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை கலெக்டர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சம்பா மற்றும் தாளடி நெற்பயிருக்கு இதுவரை தஞ்சை மாவட்டத்தில் 99 ஆயிரத்து 700 விவசாயிகள் 2 லட்சத்து 30 ஆயிரத்து 178 ஏக்கர் பரப்பளவிற்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர்.

நாளை காப்பீடு செய்யலாம்

பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆகும். அன்றைய தினம் அரசு விடுமுறை என்பதால் விவசாயிகள் நாளை (திங்கட்கிழமை) வரை பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தில் இணைந்திடாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயிர் காப்பீட்டு பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து, நியாய விலைகடைகளில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு, வழங்கப்படும் பொருட்களின் தரத்தினையும் எடையினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளியில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு சாவடி மையத்தினையும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம், கூட்டுறவு சங்கங்களின் சார் பதிவாளர் ராமச்சந்திரன், கூட்டுறவு அலுவலர் மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்