மது குடிக்கும் பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

வில்லியனூர் அருகே மது குடிக்கும் பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-12-14 22:45 GMT
வில்லியனூர், 

வில்லியனூரை அடுத்த கூடப்பாக்கம் சுபலட்சுமி நகரை சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 56). இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும் 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

ஆதி மூலம் சென்னையில் ஒரு வீட்டில் தங்கி இருந்து சமையல்காரராக வேலை செய்து வந்தார்.

இவர் விடுமுறையில் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். அதேபோல் நேற்று முன்தினமும் ஆதிமூலம் விடுமுறையில் வீட்டுக்கு வந்தபோது அதிகமாக மதுகுடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனை அவருடைய மனைவி தனலட்சுமி கண்டித்தார்.

அதனால் மனமுடைந்த ஆதிமூலம் வீட்டின் குளியலறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்