அரக்கோணத்தில் வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது

அரக்கோணத்தில் வாலிபர் கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-12-16 23:00 GMT
அரக்கோணம், 

அரக்கோணம், நன்னுமீரான் சாயபு தெருவை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் பிரவீன் (வயது 24), மார்க்கெட் அருகே டீக்கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தூய அந்திரேயர் பள்ளி அருகே உள்ள ஒரு கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரவீனை கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு ரெயில் நிலையம் செல்லும் வழியாக தப்பி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கே.மனோகரன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பிரவீனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்த பிரவீனின் உறவினர்கள், நண்பர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனை முன்பு குவிந்ததால் பிரவீனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலையில் அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தில் பங்க் கடை நடத்தி வரும் சசிக்குமார் (25) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சசிக்குமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடந்த 2015-ம் ஆண்டு சசிக்குமாரின் நண்பன் அரக்கோணத்தை சேர்ந்த மோகன் என்பவரை சிலர் வெட்டி கொலை செய்தனர். இதில் பிரவீனுக்கு தொடர்பு இருந்ததால் அந்த கொலைக்கு பழிக்கு பழியாக பிரவீனை கொலை செய்ததாக அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் சசிக்குமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரது நண்பர்கள் 3 பேர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்