கரசங்கால் அருகே சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரசங்கால் அருகே சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-12-17 22:15 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக வண்டலூர்-வாலாஜாபாத் 6 வழி நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக தாம்பரம், சென்னை, காஞ்சீபுரம், வேலூர், பெங்களூரு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு பஸ்கள் செல்கிறது. இந்த 6 வழிச்சாலையின் பணிகள் முடிவடைந்து வரும் நிலையில் படப்பை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் பணி முழுமையாக முடிவடையவில்லை.

இதனால் படப்பை பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியாக இந்த பகுதி உள்ளது.

இந்த நிலையில் இந்த 6 வழிச்சாலை செல்லும் பகுதியான கரசங்கால் அருகே அடிக்கடி சாலையின் கீழே செல்லும் குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்து அதிலிருந்து நீர் வெளியேறி சாலையில் சென்று கொண்டிருந்தது. இதனை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் சாலையை தோண்டினார்கள். தோண்டப்பட்டு குழாயை சரிசெய்து விட்டு பள்ளத்தை சரியான முறையில் மூடாமல் அப்படியே விட்டுவிட்டனர்.

இந்த சாலை வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், அரசு பஸ்கள், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பள்ளம் இருப்பது தெரியாமல் அருகில் வரும்போது திடீரென பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் ஒரு சில சமயங்களில் பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர்.

எனவே பெரும் விபத்து ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்