வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் ஆதிதிராவிடர் சாதிச்சான்றிதழை ரத்து செய்யக்கோரி `திடீர்' சாலை மறியல்

வேட்புமனுதாக்கல் செய்தவர்கள் வேறு மாவட்டத்திலிருந்து வழங்கிய ஆதிதிராவிடர் சாதிச்சான்றிதழை அளித்ததால் அதனை ரத்து செய்யக்கோரி ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-12-18 22:15 GMT
தண்டராம்பட்டு,

தண்டராம்பட்டு ஒன்றியம் ரெட்டியார்பாளையம் ஊராட்சி தலைவர் பதவி பொதுப் பிரிவில் இருந்தது. தற்போது எஸ்.சி. பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த பகுதியை சேர்ந்த உப்பு குறவன் இனத்தில் இருந்து 5 பேர் மனுதாக்கல் செய்து உள்ளனர். இவர்கள் தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா அலுவலகத்தில் ஆதிதிராவிடர் சாதிச்சான்று பெற்றிருந்தனர்.

எனவே இது தவறான சான்றிதழ் என்றும் இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒரு தரப்பினர் தானிப்பாடி- சேலம் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தானிப்பாடி போலீசார், தண்டராம்பட்டு தாசில்தாரை சந்திக்கும் படி அறிவுறுத்தினர். இதனால் சுமார் 20 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் தாசில்தார் நடராஜனையும், தேர்தல் அலுவலர் செல்வத்திடமும் மனு அளித்தனர். சாதிச் சான்று ரத்து செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்றும், இது தொடர்பாக அரூர் தாலுகா அலுவலகத்தை அணுகும் படியும் தாசில்தார் நடராஜன் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி திருப்பி அனுப்பினார்.

மேலும் செய்திகள்