அந்தியூர் அருகே வனப்பகுதியில் பதுக்கிய நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்; தொழிலாளி கைது
அந்தியூர் அருகே வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டுத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக தொழிலாளியையும் கைது செய்தனர்.
டி.என்.பாளையம்,
அந்தியூர் வனச்சகரத்துக்கு உள்பட்ட மலைக்கிராமம் தொட்டக்கோம்பை. இந்த கிராமம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஒருவர் நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்துள்ளதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவல் கிடைத்ததும் பங்களாப்புதூர் போலீசார் தொட்டக்கோம்பை பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தார். உடனே அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ‘அவர் அந்த பகுதியை சேர்ந்த தொழிலாளியான ராஜன் (வயது 41) என்பதும், அவர் தன்னுடை வீட்டின் அருகே வனப்பகுதிையயொட்டி பாறை இடுக்கில் நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்ததும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நாட்டுத் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்ததுடன், ராஜனையும் கைது செய்தனர்.