குழந்தை பெற்றெடுத்த மாணவி தற்கொலைக்கு காரணமான உறவினர் கைது

திருச்சி அருகே குழந்தை பெற்றெடுத்த மாணவி தற்கொலைக்கு காரணமான உறவினர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-12-19 22:15 GMT
ஜீயபுரம்,

திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர் திடீரென வி‌‌ஷத்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தபோது அவர் கர்ப்பமாக இருப்பதும், வயிற்றில் குழந்தை நன்கு வளர்ச்சி அடைந்து இருந்ததும் தெரியவந்தது.

இரண்டு உயிர்களையும் காப்பாற்ற டாக்டர்கள் போராடினர். ஆனால், பிரசவத்தில் ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. 10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் இருந்த மாணவியும் சிகிச்சை பலனின்றி இறந்தார். தனது கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று உறவினர்கள் மற்றும் போலீசார் கேட்டபோது யார் பெயரையும் அந்த மாணவி குறிப்பிட்டு சொல்லாமலேயே இறந்து விட்டார்.

உறவினர் கைது

இதுகுறித்து மாணவியின் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில், மாணவியின் உறவினரான தமிழ்செல்வன் (23) அந்த மாணவியிடம் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங் படித்து விட்டு திருச்சியில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த தமிழ்செல்வனை போலீசார் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தான், மாணவியை கர்ப்பமாக்கியது தெரியவந்தது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்