தண்டவாளம் அமைக்க உள்ளதாக ரெயில்வே நிர்வாகத்தினர் நோட்டீஸ்: மாற்று இடம் வழங்க கோரி பொதுமக்கள் தர்ணா

ஓமலூர் அருகே தண்டவாளம் அமைக்க உள்ளதாக ரெயில்வே நிர்வாகத்தினர் நோட்டீஸ் அளித்ததால், மாற்று இடம் வழங்க கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-12-19 23:00 GMT
ஓமலூர்,

ஓமலூர் அருகே உள்ள வெண்ணக்கல்பட்டி ஊராட்சி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளை நிற கற்களை வெட்டி எடுத்து சென்று உள்ளனர். இதற்காக ரெயில் தண்டவாளம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் கடந்த 20 ஆண்டுகளாக ரெயில் போக்குவரத்து இல்லை.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ரெயில்வே நிர்வாகத்தினர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதில், ரெயில் பாதைக்காக புதிதாக தண்டவாளம் அமைக்க உள்ளதால் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தர்ணா போராட்டம்

இதைத்தொடர்ந்து அவர்கள் மாற்று இடம் வழங்க கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெயில்வே நிர்வாகத்தினர் இடத்தை காலி செய்ய வலியுறுத்தி மீண்டும் நோட்டீஸ் வழங்கினர்.

எனவே மாற்று இடம் வழங்க கோரி எம்.ஜி.ஆர். நகர் பொதுமக்கள் நேற்று ஓமலூர் தாலுகா அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் குமரன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மாற்று இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்