மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய தொழில் அதிபர் கைது - 2 பேருக்கு வலைவீச்சு

மனைவியை கட்டாயப்படுத்தி நண்பர்களுக்கு விருந்தாக்கிய தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-12-19 23:22 GMT
மும்பை,

மும்பை காந்திவிலி கிழக்கு தாக்குர் காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்த 39 வயது பெண் ஒருவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு தொழில் அதிபருடன் திருமணமானது. இந்த நிலையில் சம்பவத்தன்று தொழில் அதிபர் தன் நண்பர்கள் 2 பேரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

அப்போது தனது மனைவியிடம் நண்பர்களிடம் உல்லாசமாக இருக்கும்படி கேட்டதாக தெரிகிறது. இதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் அவர் கட்டாயப்படுத்தி மனைவியை, நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வைத்துள்ளார். மேலும் இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார். இச்சம்பவத்தை வெளியே தெரிவித்தால் வீடியோவை காண்பித்து உன்னை அவமானப்படுத்தி விடுவேன் என மனைவியை மிரட்டி வைத்துள்ளார்.

கடந்த ஒரு வருடமாக இதே நிலைமை நீடித்து வந்ததால் மனஉளைச்சல் அடைந்த அப்பெண் முல்லுண்ட்டில் வசிக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு பெற்றோரிடம் தனக்கு நடந்த கொடுமைகளை கூறி கதறி அழுது உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து முல்லுண்டு போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி சம்ந்தா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பெண்ணின் கணவரை கைது செய்தனர். மேலும் கணவரின் 2 நண்பர்கள் தலைமறைவாகி விட்டதால் அவர்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்