நாமக்கல் அருகே, லாரி- மோட்டார்சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி

நாமக்கல் அருகே லாரி- மோட்டார்சைக்கிள் மோதல் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-12-20 22:15 GMT
நாமக்கல், 

நாமக்கல் அருகே உள்ள ஏளூரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் ராஜசேகர் (வயது 32). தறித்தொழிலாளி. இவர் நேற்று காலை வழக்கம்போல் அவரின் உறவினர் ரவியுடன் மோட்டார்சைக்கிளில் வேலைக்கு சென்றார். 

மோட்டார் சைக்கிளை ரவி ஓட்டிச் சென்றார். அவரது பின்னால் ராஜசேகர் அமர்ந்து இருந்தார். ஏளூர் அரசு பள்ளி அருகே மோட்டார்சைக்கிள் சென்றபோது, அந்த வழியாக லாரி ஒன்று வந்தது. அப்போது லாரி டிரைவர் திடீரென வலதுபுறமாக லாரியை திருப்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற புதுச்சத்திரம் போலீசார், ரவி மற்றும் ராஜசேகரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராஜசேகரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இதற்கிடையே விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்