ஈரோட்டில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு - மனைவி கண்முன் நேர்ந்த பரிதாபம்

ஈரோட்டில் கட்டிட தொழிலாளி தனது மனைவி கண்முன்னே மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-12-22 22:30 GMT
ஈரோடு, 

திருச்சி மாவட்டம் துறையூர் ஆலத்துடையான்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 52). இவருடைய மனைவி பிச்சையம்மாள் (51). இவர்கள் 2 பேரும் கட்டிட தொழிலாளர்கள். ஈரோடு வில்லரசம்பட்டி மாருதிநகரில் உள்ள ஒரு பூங்காவில் நேற்று முன்தினம் இரவு கான்கிரீட் தளம் அமைக்கும் பணியில் ஜெயராஜ், பிச்சையம்மாள் உள்பட சிலர் ஈடுபட்டனர். அங்குள்ள ஒரு மின் மோட்டாரை இயக்குவதற்காக ஜெயராஜ் மின்சுவிட்சை அழுத்தினார். அப்போது அவரை எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயராஜ் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்ததும் பிச்சையம்மாள் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் ஜெயராஜை ஒரு ஆட்டோவில் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜெயராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மனைவி கண் முன்னே தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அங்கு பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்