மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கலெக்டர் வெளியிட்டார்

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் பிரபாகர் வெளியிட்டார்.

Update: 2019-12-23 23:00 GMT
கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் பிரபாகர் நேற்று வெளியிட்டார். பின்னர் கலெக்டர் பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:- கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்த வாக்காளர்களை விட கூடுதலாக 1,773 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

திருத்தங்களை சரிபார்க்கலாம்

அத்துடன் இந்த வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர்களான ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகம், கிரு‌‌ஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களான தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி ஆணையாளர் அலுவலகங்கள் மற்றும் 1,850 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களில் வாக்காளர்கள் தங்களது பதிவுகள் மற்றும் திருத்தங்களை சரிபார்த்து கொள்ளலாம்.

1.1.2020-ந் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2020 இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 2020-ம் ஆண்டு ஜனவரி 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாறுதல் செய்ய விண்ணப்ப படிவம் 6, 7, 8 மற்றும் 8ஏ மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அரசு வேலை நாட்களில் பெறப்படும்.

சிறப்பு முகாம்கள்

மேலும், வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4, 5, 11 மற்றும் 12-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த முகாம் நடைபெறும் நாட்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் அளிக்கலாம். மேலும்,www.elections.tn.gov.in என்ற அரசு இணையதள முகவரி வழியாகவும், இ-சேவை மையங்களின் மூலமும் பொதுமக்கள் நேரடியாக உரிய படிவங்களை பதிவேற்றம் செய்து, இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, உதவி கலெக்டர்கள் தெய்வநாயகி (கிரு‌‌ஷ்ணகிரி), குமரேசன் (ஓசூர்), தேர்தல் தாசில்தார் ராமச்சந்திரன், மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், தாசில்தார்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்