எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தால் ஊறுகாய்தான் கிடைக்கும்: முழு சாப்பாடு கிடைக்க பா.ஜ.க.வை ஆதரியுங்கள்

எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தால் ஊறுகாய்தான் கிடைக்கும். முழு சாப்பாடு கிடைக்க பா.ஜ.க.வை ஆதரியுங்கள் என்று தஞ்சையில், நடிகர் பொன்னம்பலம் கூறினார்.

Update: 2019-12-25 23:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சையில் நேற்று நடந்தது. விழாவிற்கு தெற்கு மாவட்ட தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். பொருளாளர் ரெங்கராஜன், வர்த்தக பிரிவு கோட்ட தலைவர் பாலசெல்வம், மாவட்ட தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்சதீ‌‌ஷ் வரவேற்றார். முடிவில் மாநகர தலைவர் விநாயகம் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் வாஜ்பாயின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்புகளையும், மரக்கன்றுகளையும் வழங்கி நடிகர் பொன்னம்பலம் பேசினார். அவர் பேசும்போது, மத்திய அரசின் சார்பில் மக்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் நிதி, முழுமையாக தமிழக மக்களுக்கும், உள்ளாட்சி துறைக்கும் கிடைக்க வேண்டும் என்றால் பா.ஜ.க.விற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

பின்னர் அவர் நிருபர் களிடம் கூறுகையில், ‘‘மத்திய அரசு எது செய்தாலும் சரியாக இருக்கும். பிரதமர் மோடி அறிவு, ஆற்றல் கொண்டவர். அவர் நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறார். அவர் எடுத்துள்ள முடிவு 100 சதவீதம் சரியாகத்தான் இருக்கும். குடியுரிமை சட்டத்தால்தான், இந்திய குடிமக்களாகிய நாம், நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும். தீவிரவாதிகள் நாட்டிற்குள் புகாமல் காப்பாற்ற முடியும்.

உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் போட்டியிடுகின்றன. நீங்கள் பா.ஜ.க.வை ஆதரித்தால் மத்திய அரசின் சலுகைகளை முழுமையாக பெற முடியும். அதாவது முழு சாப்பாடு கிடைப்பது போல் ஆகும். எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தால் ஊறுகாய்தான் கிடைக்கும்்’’ என்றார்.

மேலும் செய்திகள்