தஞ்சை ராஜீவ்நகரில் பாதாள சாக்கடை குழிக்குள் சிக்கிய லாரி தொடரும் விபத்துகளால் மக்கள் அச்சம்

ராஜீவ்நகரில் சாலை சீரமைக்கப்படாததால் பாதாள சாக்கடை குழிக்குள் நேற்று லாரி சிக்கியது. தொடர்ந்து விபத்துகள் நடைபெறுவதால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2019-12-26 22:30 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளியக்ரஹாரம், வடக்கு வாசல், மாரிக்குளம் பகுதியில் கழிவுநீர் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த வார்டுகளில் இருந்து கழிவுநீர் சேகரிக்கப்பட்டு சமுத்திரம் ஏரி பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது. அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு பாசனத்துக்கு விடப்படுகிறது.

பாதாள சாக்கடை பணி

இந்த நிலையில் தஞ்சை ராஜீவ்நகர், ராஜீவ்நகர் வடக்கு தெரு, சோழன் நகர், தொல்காப்பியர் சதுக்கம் போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு புதிதாக பாதாள சாக்கடை குழாய் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்றது. இதன் காரணமாக அங்கு உள்ள தார்ச்சாலை தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக, காட்சி அளிக்கிறது.

பாதாள சாக்கடை குழாய் பணிகள் முடிவடைந்த பின்னரும் சாலையை சீரமைக்கவில்லை. இதை கண்டித்து அந்த பகுதி மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

குழிக்குள் சிக்கியலாரி

சாலைகள் சீரமைக்கப்படாததால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

மழை நேரத்தில் குண்டும்,குழியுமான இடத்தில் தண்ணீர் தேங்குவதால் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளனர். தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் சேறும்,சகதியும் நிறைந்து உள்ளதால் அடிக்கடி வாகனங்கள் பாதாள சாக்கடை குழிக்குள் சிக்கி விடுகின்றன.

நேற்று அந்த வழியாக சென்ற லாரி ஒன்று பாதாளசாக்கடை குழிக்குள் சிக்கியது. சாலை முழுவதும் சேறும், சகதியுமாக இருப்பதால் வேறு வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். விபத்துகள் தொடர்ந்து நடப்பதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இது பற்றி அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

பாதாள சாக்கடை பணி முடிந்த பின்னரும் சாலை இன்னும் சீரமைக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. மேலும் வாகனங்கள் அடிக்கடி பாதாள சாக்கடை குழிக்குள் சிக்கி விடுகிறது.இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும் அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை.எனவே அதிகாரிகள் மேலும் காலம் தாழ்த்தாமல் சாலையை சீரரமைக்க வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.

மேலும் செய்திகள்