சிவகங்கை மாவட்டத்தில், சூரிய கிரகணத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி ஏராளமானோர் கிரகணத்தை கண்டு ரசித்தனர்.

Update: 2019-12-26 22:15 GMT
சிவகங்கை, 

சிவகங்கையில் உள்ள அரசு பெண்கள் கல்லூரியில் நேற்று தெரிந்த வளைய சூரிய கிரக ணத்தை பொதுமக்கள் பார்ப்பதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் சந்திரன் கூறியதாவது:-

சென்னையில் உள்ள அறிவியல் தொழில் நுட்ப கழகத்தின் மூலமாக சிவகங்கையில் உள்ள அரசு பெண்கள் கல்லூரியில் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்து தந்தனர்.

கல்லூரி வளாகத்தில் ெதாைலநோக்கி மூலமாக சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்த்தனர். கிரகணத்தை காண 500 பிரத்யேக கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

இது போல் சிவகங்கை கலெக்டர் அலுவலக மைதானத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் காரைக்குடி அழகப்பா மெட்ரிக் பள்ளியிலும் கிரகணத்தை பார்வையிடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து காலை 7.45 மணிமுதல் 9 மணி வரை சூரிய கிரகணத்தை பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பார்வையிட்டு ரசித்தனர். மேலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பிரத்யேக கண்ணாடியும் வழங்கப்பட்டது. அதன் மூலமாகவும் பொதுமக்கள் பார்வையிட்டு ரசித்தனர்.

காளையார்கோவில் பகுதி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு வசதியாக மாவட்ட அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஸ்ரீ சொர்ண காளீஸ்வரர் கோவில் முன்பாக தொலைநோக்கி அமைக்கப்பட்டு இருந்தது. சூரிய கிரகணத்தை பார்க்க வந்திருந்த மாணவர்களிடம் கையேடுகள் வழங்கப்பட்டு சூரிய கிரகணத்தை பற்றி மாவட்ட அறிவியல் இயக்க தலைவர் ஆரோக்கியசாமி விளக்கிக் கூறினார். ஒவ்வொருவரும் தனித்தனியாக பார்ப்பதற்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

சூரிய கிரகணத்தை பொதுமக்கள், மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக பார்க்க ஏதுவாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், திருப்பத்தூர் செம்மொழிப் பூங்காவிலும், புதிய பஸ் நிலையம் அருகிலும் சூரிய பிரத்யேக கண்ணாடிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. தொலைநோக்கி மூலமாக பொதுமக்கள் சூரிய கிரகணத்தை பாதுகாப்பாக கண்டுகளித்தனர்.

இதையொட்டி மாவட்டத்தில் மடப்புரம் பத்ர காளியம்மன் கோவில், காரைக்குடி சிவன் கோவில், முத்து மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களின் நடை சாத்தப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்