கள்ளக்குறிச்சியில், அரசு பள்ளி இளநிலை உதவியாளர் மர்ம சாவு - போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சியில் அரசு பள்ளி இளநிலை உதவியாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-01-03 22:45 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் உள்ள ஏமப்பேரை சேர்ந்தவர் புஷ்பராஜ்(வயது39). இவர் கச்சிராயப்பாளையம் அருகே மாதவச்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால் அவர் தனது நண்பர் இளையாபிள்ளையுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இந்த நிலையில் நேற்று மாலையில் அவர் எம்.ஜி.ஆர். நகரில் குடிபோதையில் மயங்கியநிலையில் கிடப்பதாக அவரது மனைவி ஆனந்திக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆனந்தி சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது, அங்கு புஷ்பராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுபற்றி ஆனந்தி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து புஷ்பராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பராஜ் எப்படி இறந்தார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்