6½ லட்சம் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் அமைச்சர்-எம்.பி. தொடங்கி வைத்தனர்

6½ லட்சம் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2020-01-05 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை காவேரி சிறப்புஅங்காடியில் கூட்டுறவுத்துறை சார்பில் 6 லட்சத்து 48 ஆயிரத்து 157 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.ஆயிரம் பரிசுத்தொகை வழங்கும் திட்டம் தொடக்க விழா நேற்றுகாலை நடந்தது. இதற்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கினார். வைத்திலிங்கம் எம்.பி. முன்னிலை வகித்தார். நுகர்பொருள் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன் வரவேற்றார். பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.

பின்னர் அமைச்சர் துரைக்கண்ணு பேசும்போது, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தகுதி வாய்ந்த அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் 1,185 ரே‌‌ஷன் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 6 லட்சத்து 48 ஆயிரத்து 157 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ரூ.68 கோடியே 1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 9-ந் தேதி முதல் ரே‌‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று கொள்ளலாம் என்றார்.

உறுதுணை

வைத்திலிங்கம் எம்.பி. பேசும்போது, தமிழகம் முழுவதும் 1 கோடியே 86 லட்சத்து 77 ஆயிரத்து 288 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்து பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வழிவகை செய்துள்ளார். ஏழைகளின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழகஅரசுக்கு பொதுமக்கள் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

விழாவில் சி.வி.சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. பரசுராமன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரிகோபால், நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் கதிரேசன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்கள் பெரியசாமி, மனோகரன், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி தலைவர் அறிவுடைநம்பி, கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, நுகர்பொருள் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைத் தலைவர் ரமே‌‌ஷ் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் துணை பதிவாளர் தயாள விநாயகன் அமல்ராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்