வடமதுரை அருகே, இளம்பெண் வெட்டிக் கொலை

வடமதுரை அருகே இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-01-10 23:00 GMT
வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குறிச்சி கம்பிளியம்பட்டியில், பூத்தம்பட்டியில் இருந்து ஒத்தகணவாய்ப்பட்டி செல்லும் சாலையில் செங்கல் காளவாசல் ஒன்று உள்ளது. இந்த செங்கல் காளவாசல் அருகில் நேற்று காலை வெட்டுக்காயங்களுடன் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சவடமுத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இறந்து கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் கம்பிளியம்பட்டி அருகே உள்ள நிலப்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி திவ்யபாரதி(வயது 22) என்பது தெரியவந்தது. ஜெயக்குமார் விழுப்புரத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இதற்கிடையே திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய், இறந்துபோன திவ்யபாரதியின் உடல் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திவ்யபாரதி எதற்காக கொலை செய்யப்பட்டார்? முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் செங்குறிச்சி கம்பிளியம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்