நவநிர்மாண் சேனாவை கூட்டணியில் சேர்த்தால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு; ராம்தாஸ் அத்வாலே பேட்டி

நவநிர்மாண் சேனாவை கூட்டணியில் சேர்த்தால் பாரதீய ஜனதா பாதிக்கப்படும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

Update: 2020-01-11 23:55 GMT
மும்பை,

மராட்டியத்தில் ஆட்சியை இழந்து பாரதீய ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருக்கும் நிலையில், மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேசியதாக மராட்டிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

பாரதீய ஜனதாவுடன் நவநிர்மாண் சேனா கைகோர்க்கிறதா என்ற கேள்வியும் எழுந்து உள்ளது. இது தொடர்பாக நேற்று பாரதீய ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-

நவநிர்மாண் சேனா ஒரு பிராந்திய கட்சி. எனவே அந்த கட்சியின் ஆதரவு பாரதீய ஜனதாவுக்கு தேவையில்லை. இந்தி பேசும் புலம்பெயர்ந்த மக்களுக்கு எதிராக நவநிர்மாண் சேனா ஆக்கிரோஷ நிலைப்பாட்டை கொண்டு உள்ளது.

இதனால் அந்த கட்சியை கூட்டணியில் சேர்த்தால் பாரதீய ஜனதா அரசியல் ரீதியாக பாதிக்கப்படும். இங்கு மட்டுமல்ல. நாடு முழுவதும் பாரதீய ஜனதா பாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்