பா.ஜனதா ஆட்சியில் ஊழல் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி - விசாரணைக்கு பயப்படமாட்டோம்
முந்தைய பாரதீய ஜனதா ஆட்சியில் ஊழல் நடந்தது என காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் கூறியதற்கு தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்து உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசு அமைந்து உள்ளது. இந்த நிலையில், முந்தைய பாரதீய ஜனதா ஆட்சியின் போது ஊழல் நடந்து உள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்று காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் கூறியிருந்தார். இதற்கு பாரதீய ஜனதா பதிலடி கொடுத்து உள்ளது.
இது தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் சோலாப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்களை பயம் காட்ட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம். என்னுடைய தலைமையிலான முந்தைய பாரதீய ஜனதா அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டது.
எனவே தற்போதைய அரசாங்கம் எந்த விசாரணைக்கும் உத்தரவிடலாம்.
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசாங்கம் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.