அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடந்தது.

Update: 2020-01-12 22:30 GMT
பெரம்பலூர்,

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கும் வருகிற 22-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கடந்த 4, 5-ந் தேதிகளிலும், நேற்று முன்தினமும் நடந்தது, அதன் தொடர்ச்சியாக நேற்றும் வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது. முகாமில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும் மற்றும் பலர் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் உள்ளிட்டவைக்கும் விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்தனர்.

கலெக்டர் ரத்னா ஆய்வு

விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது. அவர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை வருகிற 25-ந் தேதி தேசிய வாக்காளர் தின விழாவின்போது வழங்கப்படவுள்ளது. அரியலூர் மாவட்டம், தவுத்தாய்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வாரணவாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். அப்போது அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பாலாஜி மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்