அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான குழுவை நியமித்து மதுரை ஐகோர்ட்டு உத்தர விட்டுள்ளது.

Update: 2020-01-13 23:30 GMT
மதுரை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் நாளையும் (புதன்கிழமை), பாலமேட்டில் 16-ந் தேதியும், அலங்காநல்லூரில் 17-ந் தேதியும் ஜல்லிக்கட்டு நடக்கிறது.

இந்த நிலையில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான குழுவில் அனைத்து சமுதாயத்தினரையும் சேர்க்க வேண்டும். கலெக்டர் அமைத்துள்ள கமிட்டியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அருந்ததியினர் சமுதாயத்தை சேர்ந்தவரை கமிட்டி உறுப்பினராக சேர்க்க வேண்டும். ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படும் காளைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் மதுரை ஐகோர்ட்டில் ஏராளமானோர் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளை நேற்று நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்த ஒருங்கிணைப்பு மற்றும் அறிவுரை என 2 குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இந்த குழு நாளை (15-ந்தேதி) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை நடத்தும். அதன்படி ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் நியமிக்கப்படுகிறார்.

உறுப்பினர்களாக மாவட்ட கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அறிவுரை குழுவில் அவனியாபுரத்தில் வசிக்கும் 16 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர். ஒருங்கிணைப்பு குழுவின் கீழ் தான் அறிவுரை குழு செயல்பட வேண்டும்.

அவர்கள் ஜல்லிக்கட்டு விழாவில் தன்னிச்சையான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. ஒருங்கிணைப்பு குழு, போலீசார் மற்றும் வருவாய் அதிகாரிகளை கூட்டி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி முழுவதையும் வீடியோ பதிவு செய்து, அறிக்கையுடன் ஐகோர்ட்டு பதிவுத்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். காளைகள் நோயின்றி இருப்பதையும், போதைப்பொருள் உட்கொள்ளப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவை ஒருங்கிணைப்பு குழு நடத்தும். ஒருங்கிணைப்பு குழுவுக்கு வங்கிக்கணக்கு தொடங்கி, ஜல்லிக்கட்டுக்காக பெறப்படும் நன்கொடை உள்ளிட்ட நிதியை முறையாக வங்கியில் செலுத்தி, வரவு-செலவு கணக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

இந்த குழுவுக்கு தேவையான உதவிகளை கலெக்டர் தலைமையிலான மாவட்ட அளவிலான கமிட்டி அளிக்க வேண்டும். வாடிவாசல், காளைகள் நுழைவுவாயில், மருத்துவ பரிசோதனை செய்யும் இடம் ஆகிய பகுதிகளில் தேவையான வசதிகளையும், பாதுகாப்பையும் மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் செய்ய வேண்டும். பிளக்ஸ் உள்ளிட்ட விளம்பர பலகைகளை ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் வைக்கப்படவில்லை என்பதை சம்பந்தப்பட்ட குழு உறுதிப்படுத்த வேண்டும்.

காளைகள் ஒன்றையொன்று உரசிக்கொண்டு நிற்காமல் இருக்க போதுமான இடவசதியை ஏற்படுத்த வேண்டும். விலங்குகள் நல வாரிய விதிகளையும் பின்பற்ற வேண்டும்.

ஜல்லிக்கட்டில் காளைகள், அவற்றின் உரிமையாளர் உள்ளிட்ட யாருக்கும் முதல் மரியாதை கிடையாது. ஜல்லிக்கட்டுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த குழுக்களானது தற்காலிகமானது தான். குழு தலைவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை ஊதியமாக ஒரு வாரத்தில் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

இதேபோல அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவையும் ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு நடத்த வேண்டும் என்றும், அறிவுரை குழு உறுப்பினர்களாக 36 பேரை நியமித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவுக்கான விதிமுறைகள் அனைத்தும் அலங்காநல்லூருக்கும் பொருந்தும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பாலமேடு கிராம ஜல்லிக்கட்டுவை மகாலிங்கசுவாமி மடத்து கமிட்டி நடத்தலாம். ஆனால் மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையிலான கலெக்டர், ஐ.ஜி, பாலமேடு பேரூராட்சி உதவி இயக்குனர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கண்காணிக்கும். மற்ற ஊர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்