மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் நெல்லை கண்ணன் ஆஜர் - கோர்ட்டு உத்தரவுப்படி கையெழுத்திட்டார்

மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் நெல்லை கண்ணன் நேற்று ஆஜரானார். கோர்ட்டு உத்தரவுப்படி கையெழுத்திட்டு சென்றார்.

Update: 2020-01-13 22:30 GMT
நெல்லை,

நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 29-ந் தேதி நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாக மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டு ஜாமீன் வழங்கியதால் அவர் சிறையில் இருந்து வீடு திரும்பினார்.

அவருக்கான ஜாமீனில் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தினமும் காலை, மாலையில் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி நெல்லை கண்ணன் நேற்று மாலை மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

அப்போது அவர் கூறுகையில், “நெல்லை தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை” என்றார். அப்போது எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் கனி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்