விழுப்புரத்தில் பிரபல லாட்டரி வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

விழுப்புரத்தில் பிரபல லாட்டரி வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2020-01-14 23:00 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக கடந்த ஒரு மாதத்தில் 80-க்கும் மேற்பட்டோரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மேலும் தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வோர்களை கண்டறிந்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையையும் மாவட்ட காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் ரஹமத் கோல்டன் சிட்டி பகுதியை சேர்ந்த பிரபல லாட்டரி வியாபாரியான கிருஷ்ணமூர்த்தி மகன் ஸ்ரீதர் (வயது 39) என்பவர் விழுப்புரம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை தொடர்ந்து விற்பனை செய்து வந்துள்ளார். இவர் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், தகராறு வழக்கு, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

குண்டர் சட்டத்தில் கைது

கடந்த சில வாரத்திற்கு முன்பு லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்கு தொடர்பாக ஸ்ரீதரை விழுப்புரம் மேற்கு போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்கள் மட்டுமின்றி லாட்டரி சீட்டு விற்பனையிலும் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் ஸ்ரீதரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.

இதையடுத்து ஸ்ரீதரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் விழுப்புரம் மேற்கு போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்