அவுரங்காபாத்தில் கோபிநாத் முண்டேவுக்கு நினைவகம் கட்ட மரங்களை வெட்டக்கூடாது சிட்கோவுக்கு, மாநகராட்சி கடிதம்

அவுரங்காபாத்தில் கோபிநாத் முண்டேவின் நினைவகம் கட்டுவதற்கு மரங்களை வெட்டாமல் இருக்க புதிய திட்டத்தை தயாரிக்கும்படி சிட்கோவுக்கு மாநகராட்சி கடிதம் எழுதி உள்ளது.

Update: 2020-01-14 23:45 GMT
அவுரங்காபாத், 

அவுரங்காபாத்தில் கோபிநாத் முண்டேவின் நினைவகம் கட்டுவதற்கு மரங்களை வெட்டாமல் இருக்க புதிய திட்டத்தை தயாரிக்கும்படி சிட்கோவுக்கு மாநகராட்சி கடிதம் எழுதி உள்ளது.

கோபிநாத் முண்டே நினைவகம்

அவுரங்காபாத்தில் பாரதீய ஜனதாவை சேர்ந்த மறைந்த முன்னாள் மத்திய மந்திரி கோபிநாத் முண்டேவுக்கு நினைவகம் கட்டப்படுகிறது. இதற்கான பணிகளை மாநில அரசின் நகர மற்றும் தொழில் மேம்பாட்டு கழகம் (சிட்கோ) மேற்கொள்கிறது. இதற்காக கோபிநாத் முண்டே நினைவகம் அமைய உள்ள இடத்தில் 110 மரங்களை வெட்டுவதற்கு அவுரங்காபாத் மாநகராட்சியிடம் சிட்கோ அனுமதி கேட்டது.

இதற்கிடையே, அவுரங்காபாத்தில் உள்ள பிரியதர்ஷினி பூங்காவில் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே நினைவகம் அமைக்க மரங்கள் வெட்டப்படுவதாக எழுந்த பிரச்சினையை தொடர்ந்து, அங்கு ஒரு மரம் கூட வெட்டப்படாது என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

சிட்கோவுக்கு கடிதம்

இந்தநிலையில், அவுரங்காபாத்தில் மரங்கள் வெட்டப்படாமல் கோபிநாத் முண்டேயின் நினைவகத்தை அமைப்பதற்கு புதிய திட்டத்தை தயார் செய்யும்படி சிட்கோவுக்கு அவுரங்காபாத் மாநகராட்சி துணை கமிஷனர் சுமித் மோரே கடிதம் எழுதி உள்ளார்.

இதுபற்றி அவுரங்காபாத் மாநகராட்சி கமிஷனர் ஆஸ்திக் குமார் கூறுகையில், கோபிநாத் முண்டே நினைவகம் அமைய தேர்வு செய்யப்பட்டு உள்ள இடம் மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. அங்குள்ள மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், என்றார்.

மேலும் செய்திகள்