வெளிநாட்டில் வேலை பார்த்த முதுகுளத்தூரை சேர்ந்தவர் சாவு - உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர கோரிக்கை

வெளிநாட்டில் வேலை பார்த்த முதுகுளத்தூரை சேர்ந்தவர் மாரடைப்பால் இறந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-01-16 22:30 GMT
முதுகுளத்தூர், 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள வென்னீர்வாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி(வயது 46). இவரது மனைவி வனிதா(38). இவர்களுக்கு சவுமியா(17), தேசிகா(13) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டி வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு பணியில் இருந்தபோது கடந்த 15-ந்தேதி மாரடைப்பால் இறந்து விட்டதாக உடன் வேலை செய்தவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டியின் குடும்பத்தினர் கதறி அழுததுடன், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, நவாஸ்கனி எம்.பி. ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

வேலைக்காக வெளிநாடு சென்றிருந்த பாண்டி இறந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்