களியக்காவிளை சோதனைச் சாவடியில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்றது ஏன்? கைதான பயங்கரவாதிகள் பரபரப்பு தகவல்

களியக்காவிளை சோதனைச் சாவடியில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான பயங்கரவாதிகள் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

Update: 2020-01-16 23:15 GMT
நாகர்கோவில்,

தமிழக- கேரள எல்லையில் குமரி மாவட்டம் களியக்காவிளையில் சோதனை சாவடி ஒன்று உள்ளது. இங்கு கடந்த 8-ந் தேதி இரவு பணியில் இருந்த களியக்காவிளை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த கொலையில் ஈடுபட்டது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமீம் (32), நாகர்கோவில் இளங்கடையைச் சேர்ந்த தவுபிக் (28) என்பதும் தெரிய வந்தது.

கர்நாடகா வழியாக தப்ப முயற்சி

தமிழ்நாடு, கேரள போலீசார் பயங்கரவாதிகள் 2 பேரின் புகைப்படங்களையும் வெளியிட்டதோடு, அவர்களை பற்றி தகவல் கொடுப்போர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்தனர். இருமாநில போலீசாரும் பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே பயங்கரவாதிகளுக்கு துப்பாக்கி வாங்கி கொடுத்ததாக மெகபூப் பாஷா என்ற இஜாஸ் பாஷாவை கர்நாடக மாநில போலீசார் குண்டலுபேட்டையில் கைது செய்தனர். கார் டிரைவரான இவர்தான் பயங்கரவாதிகள் 2 பேருக்கும் துப்பாக்கி வாங்கி கொடுத்தது தெரிய வந்தது.

மேலும் அப்துல் சமீம் தனது கூட்டாளிகளான காஜாமொய்தீன், செய்யது அலி நவாஸ் ஆகியோருடன் சேர்ந்து புதிதாக ஒரு இயக்கத்தை உருவாக்கி அதன்மூலம் தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரிய வந்தது. மேலும் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரும் கேரளாவில் இருந்து கர்நாடக மாநிலம் உடுப்பி வழியாக மராட்டிய மாநிலத்துக்கு ரெயிலில் தப்பிச்செல்ல முயன்றது தெரிய வந்தது.

துருவி, துருவி விசாரணை

இதையடுத்து கர்நாடக போலீசார் தமிழகம் மற்றும் கேரள மாநில போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் உடுப்பி போலீசாரும் உஷார் படுத்தப்பட்டனர். தகவல் கிடைத்ததும் தமிழகம் மற்றும் கேரள மாநில போலீசார் உடுப்பி இந்திராலி ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு அரண் அமைத்து எக்ஸ்பிரஸ் ரெயிலில் வடமாநிலத்துக்கு தப்ப முயன்ற அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேரையும் நேற்று முன்தினம் இரவில் குமரி மாவட்டத்துக்கு அழைத்து வந்தனர். நேற்று காலை 5 மணிக்கு அவர்கள் களியக்காவிளை போலீஸ் நிலையம் வந்து சேர்ந்தனர். அங்கு சுமார் 1½ மணி நேரம் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 6.30 மணிக்கு அங்கிருந்து தக்கலைக்கு புறப்பட்டனர். 7 மணி அளவில் அவர்கள் தக்கலை போலீஸ் நிலையத்துக்கு வந்து சேர்ந்த அவர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். 2 பேரிடமும் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், வில்சன் கொலை வழக்கை விசாரணை நடத்தும் துணை சூப்பிரண்டு கணேசன், தக்கலை துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், குளச்சல் மற்றும் சிவகங்கை, விருதுநகர் மாவட்ட உதவி சூப்பிரண்டுகள், கியூ பிராஞ்ச் அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோர் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

13 மணி நேரத்துக்கும் மேலாக...

பயங்கரவாதிகளிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து தக்கலை போலீஸ் நிலையத்துக்கு கமாண்டோ மற்றும் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். விசாரணை முடிந்து குழித்துறை கோர்ட்டுக்கு பயங்கரவாதிகளை அழைத்துச்சென்று ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்திருந்ததால் கோர்ட்டு வளாகம் மற்றும் கோர்ட்டுக்கு வெளியே அதிரடிப்படை போலீசாரின் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு இருந்தது. விசாரணை இரவு 8 மணி வரையில் 13 மணி நேரம் நடந்தது.

இதற்கிடையே பாதுகாப்பு காரணங்களுக்காக பயங்கரவாதிகள் 2 பேருக்கும் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்கு பதிலாக, அரசு டாக்டர்கள் தக்கலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரபரப்பு தகவல்கள்

விசாரணையின்போது இடையிடையே பயங்கரவாதிகளுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் காலை மற்றும் மதிய சாப்பாடு போலீஸ் நிலையத்துக்கே வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டது. பயங்கரவாதிகள் 2 பேரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்து அவர்களுக்கான மாற்று உடைகளும் கொண்டுவந்து கொடுக்கப்பட்டன. இந்த விசாரணையின் காரணமாக தக்கலை போலீஸ் நிலையம் மற்றும் நகரப்பகுதி பரபரப்புடன் காட்சி அளித்தது.

பயங்கரவாதிகள் 2 பேரிடமும் நடத்திய விசாரணையின்போது அவர்கள் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

கொலை செய்தது ஏன்?

திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைதான அப்துல் சமீம் சிறையில் இருந்த போது பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அப்போது காஜா முகைதீனை தலைவராக கொண்டு செயல்பட வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். அதன்படி புதிய இயக்கம் ஒன்றை தொடங்கி 17 பேர் அதில் செயல்பட்டுள்ளனர். காஜா முகைதீனுக்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி கிடைத்து வந்ததாக கூறப்படுகிறது. மும்பையில் தங்கி இருந்த இவர்கள் பல்வேறு சதி திட்டங்கள் தீட்டியதும் தெரியவந்துள்ளது.

காஜா முகைதீன் கைது செய்யப்பட்ட பிறகு இந்த அமைப்பை சேர்ந்த பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் உள்ள 17 பேரில் 15 போலீசார் சென்னை, டெல்லி, கர்நாடகா பகுதிகளில் கைது செய்ததாக கூறப்படுகிறது. அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேர்தான் வெளியில் இருந்துள்ளனர். எனவே தாங்கள் சார்ந்த இயக்கத்துக்கும், தங்களுக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்து, கைது நடவடிக்கையில் ஈடுபடும் போலீசாருக்கு தங்களது எதிர்ப்பை காண்பிக்க வேண்டும் என்று அப்துல் சமீமும், தவுபிக்கும் முடிவு செய்தனர். அதன்படி குமரி மாவட்டத்தில் களியக்காவிளை சந்தை ரோடு சோதனைச் சாவடியில் இந்த திட்டத்தை அரங்கேற்ற முடிவெடுத்து கடந்த 8-ந் தேதி தங்களது சதித்திட்டத்தை செயல்படுத்தி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை கொலை செய்திருக்கிறார்கள். இந்த இடத்தை தவுபிக்தான் தேர்வு செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முன்விரோதம் இல்லை

கொலை செய்யும்போது தவுபிக்தான் துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், அப்துல் சமீம் வெட்டுக்கத்தியை வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். தவுபிக், வில்சனை துப்பாக்கியால் சுட்டபிறகு அப்துல் சமீம் வெட்டுக்கத்தியால் வெட்டியுள்ளார். வில்சனுக்கும், பயங்கரவாதிகள் 2 பேருக்கும் இடையே ஏற்கனவே எந்த முன்விரோதமும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த சோதனைச்சாவடியில் சம்பவத்தன்று முஸ்லிம் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் இருந்தாலும் கொலை செய்திருப்போம் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். எங்களது நோக்கம் போலீசாருக்கு எதிராக எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் இந்த கொலையை செய்ததாக கூறியுள்ளனர்.

இதற்காக ஏற்கனவே 2 பேரும் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால் யார் இந்த பயிற்சியை அளித்தது என்பதை தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்துக்காக தாங்கள் கொலை செய்யப்பட்டாலும் அதற்காக கவலைப்படவில்லை என்றும், தங்களுக்கும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேறு யாருக்கும் தங்களது அமைப்பு ரீதியான தொடர்பு இல்லை என்றும் அவர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

3 மாத கர்ப்பிணி

கைது செய்யப்பட்டுள்ள தவுபிக்குக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளதாகவும், அவருடைய மனைவி 2-வதாக 3 மாத கர்ப்பிணியாக இருந்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்