பாலக்கோடு அருகே வாகனம் மோதி காயமடைந்த அரசு ஊழியர் சாவு

பாலக்கோடு அருகே மோட்டார்சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த அரசு ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-01-20 22:15 GMT
பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மாங்கரை பகுதியை சேர்ந்தவர் கமலேசன்(வயது57). இவர் கிருஷ்ணகிரி அரசுஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் தனது மனைவி மல்லிகாவுடன் கிருஷ்ணகிரியில் வசித்து வந்தார்.

கடந்த 14-ந் தேதிகணவன்-மனைவி 2 பேரும் கிருஷ்ணகிரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்தனர். பாலக்கோடு அருகே உள்ள ஆராதஅள்ளி கூட்ரோடு பகுதியில் வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

பரிதாப சாவு

இந்த விபத்தில் கமலேசன், மல்லிகா ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர்களை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கமலேசன் நேற்று பரிதாபமாக இறந்தார். மல்லிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்